தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 இடங்களில் ரூ.27 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் திறப்பு விழா எம்.பி. சுதா திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் பழைய பேருந்து நிலையம், காத்தான்சாவடி பேருந்து நிறுத்தம் மற்றும் தரங்கம்பாடி கடற்கரை ஆகிய மூன்று இடங்களில், மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பு, இரவு நேரங்களில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முக்கியமான பகுதிகளில் இந்த உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கலந்து கொண்டு, பொதுமக்களைக் கொண்டு உயர்கோபுர மின்விளக்குகளை திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து, மின்விளக்குகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதனால் பொறையார் பழைய பேருந்து நிலையம், காத்தான்சாவடி பேருந்து நிறுத்தம் மற்றும் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் கூடுதல் வெளிச்சம் கிடைப்பதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தரங்கம்பாடி கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக உள்ள நிலையில், அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டிருப்பது இரவு நேர பயன்பாட்டிற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் உதவும் என கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவி சுகுண சங்கரி குமரவேல், பேரூராட்சி செயல் அலுவலர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர், பேரூராட்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













