திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேளாங்கண்ணி சென்ற பக்தர்கள் காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதி..
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, தஞ்சாவூர் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற காரும், நாகப்பட்டினத்தில் இருந்து அம்மையப்பன் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவம் இடத்தில் இருந்த நபர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு உள்ளாகவே முதலுதவி நடவடிக்கையில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், விபத்து ஏற்பட்ட கார்களில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், ராஜகிரி பகுதி, மாதா கோவில் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி குடும்பத்தினர் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் எதிரே வந்த மற்றொரு காரில் இருந்த 13 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் காயம் அடைந்தனர்.
ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் அந்தோணிசாமி மற்றும் அவரது மருமகள்கள் ஆரோக்கிய இளவரசி மற்றும் சோபியா ஜாய்சிஸ் மேரி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆல்வின் கிளாரிஸ், மேக்லின், ரோஸ்லின் மற்றும் 3 வயது குழந்தை லோரா அருளாசினி ஆகியோர் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது நிகழ்த்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். இதே போல எதிரே வந்த காரில் பயணித்த நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி தேவி காமாட்சி மற்றும் அவரது மகள் சமித்தா ஸ்ரீ ஆகியோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

















