மயிலாடுதுறை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி உரிய ஆவணங்கள் இருந்தாலும், டிப்பர் லாரிகளை இயக்க லஞ்சம் கேட்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் டிப்பர் லாரி மற்றும் ஒட்டுநர் உரிமையாளர் நல சங்கத்தினர் புகார்:- மாவட்டத்தில் அனுமதி பெற்று செயல்பட்டு வந்த 9 குவாரிகளும் இயங்காததால் ரிங் ரோடு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1000-க்கு மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வருகிறது. இதனை நம்பி ஏராளமான வணிகர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் மணல், சவுடு, வண்டல் மண் மற்றும் கட்டுமான பொருள்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல உரிய ஆவணங்கள் இருந்தும் லாரிகளை இயக்க மாமூல் கேட்பதாக கனிம வளத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கனிமவளத்துறை அதிகாரி குறித்து, மாவட்ட டிப்பர் லாரி மற்றும் ஒட்டுநர் உரிமையாளர் நல சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியது: தமிழக கனிம வளத்துறையால் ஏற்கெனவே அனுமதி பெற்று செயல்பட்டு வந்த சவுடு மற்றும் கிராவல் குவாரியை மறு ஆய்வு செய்வதாக, மாவட்டத்தில் புதிதாக பணியேற்றுள்ள கனிமவளத்துறை அதிகாரி கையூட்டு பெறும் நோக்கத்துடன் அனுமதி பெற்ற குவாரிகளை இயக்கிட கூடாது என்று மிரட்டும் பானியில் உத்தரவு இட்டுள்ளார். வெளி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் வரும் ஜல்லி, கிராவல், எம்-சாண்ட், பி சாண்ட் ஆகியவற்றை ஏற்றி வரும் லாரிகள் ஆவணம் சரிபார்த்தல் என்ற பெயரில் வாகனத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ஒட்டுநர் மற்றும் உரிமயாளர், லாரி மீது அத்து மீறி வழக்கு பதிவு செய்கிறார் என புகார் தெரிவித்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் அனுமதி பெற்று செயல்பட்டு வந்த 9 குவாரிகளும் தற்போது இயங்கவில்லை என தெரிவித்துள்ள சங்கத்தினர், இதனால் மயிலாடுதுறை ரிங் ரோடு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கனிம வளத்துறை மாவட்ட அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.













