சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர் – திருவாரூர் மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் சாலை 30 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக போடப்பட்டது. சாலை போடப்பட்டு ஆண்டுகள் பல கடந்த நிலையில், திருவாரூர் – மன்னார்குடி சாலையில் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டால் எவ்வாறு பூமி பிளந்து இருக்குமோ, அதேபோன்று இந்த சாலையின் பெரும்பாலான பகுதிகள் இருக்கின்றன.
குறிப்பாக திருவாரூர், தேவர்கண்டநல்லூர், கொட்டாரக்குடி, கமலாபுரம், பூதமங்கலம், நாலாநல்லூர், சவளக்காரன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் சேதம் அடைந்து மேலும் கீழுமாக காட்சியளிக்கின்றன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடனே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.
இந்த சாலையில் புதிதாக பயணிப்பவர்கள் விபத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவாரூரில் இருந்து ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி ஒன்று திருவாரூர் – மன்னார்குடி சாலையில் சென்று கொண்டிருந்தது.
இந்த ஓஎன்ஜிசி லாரி தேவர்கண்டநல்லூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும்போது, சேதம் அடைந்த சாலையின் மேடு பள்ளங்களில் லாரியின் டயர் சிக்கி தடம் புரண்டது.
இதனால் சாலையில் சென்ற லாரி, சாலையோரமாக இருந்த ஆல மர கிளையில் மோதியதில், ஓஎன்ஜிசி லாரியில் இருந்த கண்டெய்னர் கீழே சரிந்தது.
ஓஎன்ஜிசி லாரிக்கு பின்னால் எந்த வாகனமும் வராததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஓஎன்ஜிசி கண்டெய்னர் தூக்கப்பட்டு லாரி பின்னால் வரசெய்யப்பட்டு அதன் மேல் கண்டெய்னர் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
நிலநடுக்கம் ஏற்பட்டவாறு காட்சியளிக்கும் சாலையால், ஓஎன்ஜிசி லாரியே தடம் புரண்ட நிலையில், சாதாரண இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்து ஏற்படுமோ என அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் திருவாரூர் – மன்னார்குடி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்















