ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் குறைந்த ஒப்பந்தப்புள்ளிக்கு டெண்டர் கோரியிருந்த தனக்கு பணியை தராமல், கூடுதல் தொகைக்கு டெண்டர் கோரியிருந்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் துணை ஒப்பந்ததாரர் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் அஹத். துணை ஒப்பந்தக்காரரான இவர் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சோழம்பேட்டை, மாப்படுகை, கங்கணம்புத்தூர், தலைஞாயிறு, முடிகண்டநல்லூர், கேசிங்கன் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில், மோட்டாருடன் கூடிய 10 ஆழ்துளைக் கிணற்றுப் பணிகளுக்கு டெண்டருக்காக விண்ணப்பித்துள்ளார். ஒவ்வொரு பணியின் மதிப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக இருந்த நிலையில், அப்துல் அகத் தனது நிறுவனம் சார்பில் 18 சதவீதம் குறைவாக ரூ.3.30 லட்சத்துக்கு அந்த பணியை செய்து தருவதாக டெண்டருக்கு முன்மொழிந்துள்ளார். அந்த முன்மொழிவுக்கான அட்வான்ஸ் தொகை எந்த காரணமும் கூறப்படாமல் வங்கியில் இருந்து அப்துல் அகத்துக்கு திருப்பி அனுப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அப்துல் அஹத், ஆளுங்கட்சியினரின் அரசியல் செல்வாக்கு காரணமாக தனது டென்டர் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக புகார் மனு அளித்தார். அரசுக்கு ஒரு பணிக்கு ரூபாய் 70,000 வீதம் மொத்தம் 7 லட்சம் மிச்சமாகும் வாய்ப்பு இருந்தும், அதை நிராகரித்துவிட்டு 3.95 லட்சம் என அதிக தொகை கோரியவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தனக்கு நிதி இழப்பும், அரசுக்கு கூடுதல் செலவு மற்றும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தன்னைப் போன்ற வெளிப்படையான முறையில் அரசுப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் உண்மையான நபர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை மறுப்பதாக தெரிவித்துள்ள அப்துல் அகத், கிட்டத்தட்ட 10 பணிகளிலும் ஏல மதிப்பீட்டுத் தொகையை விட 1.25 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது என்றும் (அதாவது மதிப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சம் என்ற நிலையில், தோராயமாக ரூ.3.95 லட்சமாக உள்ளது), தவெக நிர்வாகிகள் பணம் பெற்றுக்கொண்டு முன்கூட்டியே டெண்டரை ‘செட்’ செய்துவிட்டதாகவும், தங்களை போட்டியில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் அப்துல் அஹத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், ‘ஆதின் இன்போடெக்’ (Aadhin Infotech Pvt Ltd) நிறுவனத்திற்கு மட்டும் உடனடியாகப் பதிவு வழங்கி மூன்று டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அப்துல் அஹத் முறைகேடாக நடத்தப்பட்ட இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்து, மறு டெண்டர் விட வேண்டும், ஆன்லைன் டெண்டர் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.













