தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவரான இடது கை சுழற் பந்து வீச்சாளரான இளமுகிலன் வெள்ளி பதக்கம் வென்றதையொட்டி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
திருவாரூர் அருகே கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி – ராஜேஸ்வரி தம்பதிக்கு இளமுகிலன் என்ற மகனும், இனியா என்ற மகளும் இருக்கின்றனர்.
ராமமூர்த்தி – ராஜேஸ்வரி தம்பதியின் மூத்த மகனான இளமுகிலன், தற்போது கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள டெல்டா பப்ளிக் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டியில் மிகுந்த ஆர்வம் உடைய இளமுகிலனை அவரது கிரிக்கெட் பயிற்சியாளர் ஜெகதீசன் என்பவர் மெருகேற்றி உள்ளார்.
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான இளமுகிலன் தற்போது தென்னிந்திய அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 31 ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரை மதுரையில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், 19 வயதுக்குட்பட்டோருக்கான சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான தென்னிந்திய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் திருவாரூரை சேர்ந்த இளமுகிலன் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 நாட்களுக்கு நடைபெற்ற போட்டியில், ஒவ்வொரு இடமாக முன்னேறி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இளமுகிலன் தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்தார்.
இருந்தபோதிலும் போட்டி முழுமையாக நடைபெறாமல், வானிலை நிலவரம் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இளமுகிலன் கலந்து கொண்ட அணியானது இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 சாம்பியன்ஷிப் போட்டியில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவரான இளமுகிலன் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தது திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.
வெள்ளிப் பதக்கம் வென்ற இந்த மாணவர் விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும் படு சுட்டியாக திகழ்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பிடம் பெற்றார்.
தற்போது தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர் இளமுகிலன், தேசிய அளவில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவதற்காக தற்போது காத்திருப்பு பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில் இருந்து தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்று, பள்ளிக்கும் திருவாரூருக்கும் பெருமை சேர்த்த மாணவர் இளமுகிலனை பள்ளியின் முதல்வர் ஜோஸ்பின் லாரன்ஸ் நேரில் அழைத்து மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி விளையாட்டு ஆசிரியர் சுகேந்திரன் மற்றும் பள்ளியில் இளமுகிலனுடன் படிக்கும் மாணவர்களும் சாதனை புரிந்த இளமுகிலனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.













