பாராளுமன்றத் தொகுதி மறுசீராய்வுக்கு எதிர்ப்பு
3 கி.மீ. ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை மாதவரத்தில், பாராளுமன்றத் தொகுதி மறுசீராய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காங்கை குமார் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் ஜெ. மாரி ஆகியோர் தலைமையில், 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாதவரம் பேருந்து நிலையத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து தபால் பெட்டி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாகச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, “மத்திய அரசே ஜனநாயக உரிமையைப் பறிக்காதே”, “தொகுதிகளைக் குறைக்காதே”, “தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யாதே” உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பேரணியில் “REJECT MODI LIMITATION” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.
சுமார் 3 கிலோமீட்டர் நடைபெற்ற இந்தக் கண்டனப் பேரணியின் முடிவில், தபால் பெட்டி பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னாள் மாவட்டத் தலைவர் ரமேஷ், வெங்கடேசன், அன்பழகன், அருண்குமார், சர்க்கிள் தலைவர் மற்றும் 28-வது வட்டத் தலைவர் பி. உதயன், மாதவரம் மத்திய சர்க்கிள் மற்றும் 19-வது வட்டத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாதவரம் நிர்வாகிகள் புழல் நித்தியானந்தம், இ. மகேஷ், பி. குட்டி, வி. ராக்கி, ஆனந்த், குணாளன், ராகுல், மோசஸ், ரகு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காங்கை குமார் பேட்டி
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காங்கை குமார் கூறுகையில்:
“தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் குறைக்கும் எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். எனவே, தொகுதி மறுசீராய்வு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதையே வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்றால், இதைவிட மிகப்பெரிய போராட்டங்களை மத்திய அரசு சந்திக்க வேண்டியிருக்கும்.”
என்று தெரிவித்தார்.
— திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
காங்கை குமார்













