மயிலாடுதுறையில் தவெக, திமுகவினர் போராட்டம். தவெகவினர் போராட்டம் நடத்திய இடத்தில் சாலைமறியல் போராட்டம் நடத்த வந்த திமுகவினரை போலீசார் தடுத்ததால் கடுமையான தள்ளுமுள்ளு. இரு தரப்பினரும் எதிரேதிரே முழக்கம் எழுப்பிய நிலையில் இருதரப்பினரும் கல்வீசி தாக்கியதாக கூறி தவெக, திமுகவை சேர்ந்த தலா ஒருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததால் பரபரப்பு:-
நேற்று தஞ்சாவூரில் திமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை தரக்குறைவாக விமர்சித்ததாக குற்றசாட்டு எழுந்தது. புகாரின் பேரில் தஞ்சாவூர் போலீசார் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்தனர். பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்யகோரி தவெக சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தவெகவினர் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் பேரணியாக திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். அப்போது போலீசார் தடுத்தபோது போலீசார் தடுப்பையும் மீறி தவெக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடம் அருகே திமுகவினர் வந்தபோது போலீசார் பேரி கார்டுகளை வைத்து திமுகவினரை தடுத்தனர். போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைக் கண்டு எதிர் கோஷமிட்டவாறு திமுகவினரை நோக்கி வந்த தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. தவெகவினரை தடுத்து ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ள போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து தவெகவினர் கலைந்து சென்றனர். திமுகவினர் வணிகர்களை கடைகளை மூடசொன்னதால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. திமுகவினர் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனிடையே பட்டமங்கலம் தவெக கிளைச் செயலாளர் ராமராஜ்(33) என்பவர் திமுகவைச் சேர்ந்தவர்கள் கல் வீசி தாக்கியதாக கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து திமுக மயிலாடுதுறை நகர துணை அமைப்பாளர் துரைராஜ் என்பவர் தவெகவினர் கல்வீசி தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு கட்சிகளை சேர்ந்த இருவரும் போராட்டத்தில் கல்வீசி தாக்கியதாக குற்றம்சாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













