சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் என எச்சரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருப்புகளாகவும், வணிக நிறுவனங்களாகவும் வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருக்கோயில் குடியிருப்பு நலச் சங்கத்தின் நிர்வாகிகளான தலைவர், செயலாளர் கார்த்தி, பொருளாளர் சத்தியநாதன் மற்றும் பொதுமக்கள் இணைந்து வருவாய் கோட்டாட்சியரிடம் (RDO) மனு அளித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய நலச் சங்கத் தலைவர் தெரிவித்ததாவது:
”சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள சாமியப்பர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியின் 7-வது வார்டு மேலமாரியம்மன் தெரு பகுதியில் குறைந்த விலையில் கோயில் இடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கோயில் இடங்கள் தொடர்பாக தேவையற்ற சர்ச்சைகளையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறார். கோயில் நிர்வாகத்திடம் அனுமதிச் சான்று (NOC) பெற்ற பிறகும், மின் இணைப்பு மற்றும் பிற சேவைகளைப் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களிலும், பொது வழியிலும் அவதூறுகளைப் பரப்பி இடையூறு செய்து வருகிறார்.
எனவே, அவர் மீது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகனிடம் புகார் அளித்துள்ளோம். மனுவை பரிசீலித்த அதிகாரிகள், விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால், குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 5,000-க்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி, சம்பந்தப்பட்ட நபருக்குச் சொந்தமான நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்,” என எச்சரித்தார்.
இப்பேட்டியின் போது திருக்கோயில் குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.














