இந்திய நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏ.வி.சி. கல்லூரியில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகளான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை முன்னிட்டு, ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது செல்பேசி மூலம் சுய கணக்கெடுப்பை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், மொபைல் செயலி மற்றும் இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பை எவ்வாறு மேற்கொள்வது, அதன் பயன்கள் என்ன, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, தாசில்தார் விஜயராகவன், ஏ.வி.சி. கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.















