மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட நடை பயணம், காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாரில் நிறைவடைந்தது , மற்றவர்கள் குதிரை ஆடு மற்றும் மற்ற பேரம் என செய்கின்றனர் ஆனால் நாம் தமிழர்களை காப்பாற்றுகின்ற செயலில் ஈடுபட்டு வருகிறோம் என அன்புமணி ராமதாஸ் பேச்சு :-
மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், காவிரி நதியை காப்பாற்ற கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஒன்றாம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் நடை பயணத்தை துவக்கினார், காவிரி பாயும் கரூர், திருச்சி தஞ்சை ஆகிய தமிழக மாவட்டங்களின் வழியாக பிரச்சார பயணத்தை அவர் மேற்கொண்டார். நிறைவு நாளான இன்று, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாரில் தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து காவிரி காப்போம் என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அன்புமணி ராமதாஸுக்கு விவசாயிகள் சார்பில் மரத்தினால் செய்யப்பட்ட ஏர் கலப்பை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தின் சார்பில், கட்டளை தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் வாழ்த்தை தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அன்றாடம் துடித்துக் கொண்டு இருப்பது மட்டுமில்லாமல் அதற்கான காயையும் நகர்த்திக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்தில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி ஆற்றையே நம்பியுள்ளனர்.
கர்நாடகா நபர்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் அடாவடி பிடிவாதம் மற்றும் எந்த சட்டத்தையும் அவர்கள் மதிக்க மாட்டார்கள் எனவும் குற்றம் சாட்டினார். காவிரியை தடுத்து ஏற்கனவே நான்கு அணைகளை கட்டி விட்டார்கள். தமிழ்நாட்டில் மேட்டூர் என்கின்ற ஒரே ஒரு அணை மட்டும் தான் உள்ளது. தற்போது மேகதாது அணையை கட்ட முயற்சித்து வருவதாகவும் , இதன் காரணமாக இரண்டு மடங்கு அதிக தண்ணீரை அவர்கள் பாசனத்திற்கு பயன்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.
40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் உள்ளதால் இன்று வரை விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாத சூழல் உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இருக்காது இதில் அதிகம் பாதிக்கப்படுவது டெல்டா மாவட்டம் தான் என கூறினார்.
மற்றவர்கள் குதிரை ஆடு பேரம் அந்த பேரம் என்று செய்கின்றனர் ஆனால் நாம் தமிழர்களை காப்பாற்றுகின்ற செயலில் ஈடுபட்டு வருகிறோம்.
கர்நாடகாவில் 1974 இல் 6.8 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்தார்கள் ஆனால் தற்போது 21 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 29 லட்சமாக இருந்த விவசாயம் தற்போது 20 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. தற்போது அணை கட்டப்பட்டால் அவர்களுக்கு 30 லட்சமாக உயரும் நமக்கு இருபதில் இருந்து 10 லட்சமாக குறையும் என தெரிவித்தார்.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தை ஒரு இனப்படுகொலையாக நான் பார்க்கிறேன். சிவக்குமார் வருகின்ற தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற நோக்கில் இந்த அணையை கட்ட முயற்சிக்கிறார் என்றும் , அணை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. முதலமைச்சர் டி.ஜே சிவக்குமார் வீட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சந்திக்கின்றனர். டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்கின்றனர் மேகதாது அணை கட்டுவதற்கான காயை அவர்கள் நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சரின் அழுத்தம் காரணமாக அப்பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வு நேற்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் இங்கே எவ்வளவு காசு கொடுத்து எம்எல்ஏக்களை வாங்கலாம் அவர்களை கூட்டு வரலாம் என்ற பேரம் நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய மோசமான நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது நாம் இந்த காவிரி பிரச்சனையில் தான் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
யாராவது ஜல்லிக்கட்டு பார்த்து உள்ளீர்களா அதற்காக அவ்வளவு இளைஞர்கள் வந்து போராடினீர்கள். நானும் டெல்லியில் போராடினேன். உங்களது போராட்டத்தால் மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்த மேகதாது பிரச்சினையால் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தினர் சந்ததியினர் என அனைவரும் பாதிக்கப்படுவர். நாம் தற்போதும் அமைதியாக இருந்து கொண்டிருப்பதால் அங்கு வேலை நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே சாதகமாக செய்யாது எனவும் விமர்சித்தார்.
நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து தீர்ப்புகளும் நமக்கு சாதகமாக உள்ளது. ஆனால் இது எதையும் மதிக்காமல் கர்நாடகா நான் அணை கட்டுவேன் என இருக்கிறார்கள். நீங்கள் வீதிக்கு வந்து புரட்சியை ஏற்படுத்தினால் தான் மேகதாது அணயை தடுக்க முடியும்.
தண்ணீர் இல்லை என்றால் தமிழகத்தில் உற்பத்தி குறையும் , இதன் மூலம் தமிழ்நாடு பின்தங்கிய மாநிலமாக செல்லும் நிலை உருவாகும் என தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும் தேவைப்பட்டால் அங்கு போராட நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தானே நடக்கிறது. அதனால் ராகுல் காந்தி மேகதாது அணை கட்டுவது எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார். அந்தமானில் எதிர்ப்பு தெரிவிக்கும் ராகுல்காந்தி மேகதாது விற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கூறினார். அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவுக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பினார்.
டெல்டா பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தற்போது தூர்வார வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். கூட்டுறவு கடன்களை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
நானும் டெல்டாக்காரன் என ஒருவர் சொல்லிவிட்டு போய்விட்டார். டெல்டா காரனாக இருந்து என்ன பிரயோஜனம் 60 ஆண்டு காலம் ஆண்ட நீங்கள் குறைந்தது நெல் சேமிப்பு கிடங்குகளை அமைத்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினார். திமுக துரோகம் தான் செய்து கொண்டிருக்கிறது.
சமூக வலைதளம் மூலம் ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்த நீங்கள் அதே சமூக வலைதளத்தை பயன்படுத்தி மேகதாது அணை கட்டுவது தடுத்து நிறுத்த முடியாதா என தெரிவித்தார். அனைவரும் வெளியில் வந்து ரீல்ஸ் மற்றும் பதிவுகளை போட வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அடுத்த கட்டமாக அறவழிப் போராட்டம் நடைபெறும் எனவும் , மேகதாதுவில் அணைகட்ட முன் வந்தால் அதன் பிறகு நமக்கு தெரிந்த போராட்டத்தை கையில் எடுப்போம் என கூறினார்.














