மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் ஊராட்சி கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 70). கூலித் தொழிலாளியான இவர், 3-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் 2 பேர், முதியவர் மணியிடம் சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணி தான் வைத்திருந்த கத்தியால் ஆண், பெண் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவர் மணியை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மணி மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.















