செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்தநாள் விழா பல்லாயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்களின் வருகையோடு மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நன்னாளை முன்னிட்டு, சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சித்தர் பீட வளாகத்தில் கோலாகலமாக அரங்கேறியது. ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 800-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு லேப்டாப், டேப், கல்வி உதவித்தொகை, விவசாயிகளுக்கான மருந்து தெளிப்பான், மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கணினிகள், பிரிண்டர்கள் உள்ளிட்ட மொத்தம் 4,869 பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் ஆதிபராசக்தி அம்மனுக்கும், பங்காரு சித்தர் திருவுருவச் சிலைக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பங்காரு சித்தரின் திருவுருவச் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட போது, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரண்டிருந்த பக்தர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டத்துடன் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஆன்மிக இயக்கத்தின் சாதனைகளான ஸ்ரீசக்கரம் வரைதல், மூலமந்திரம் எழுதுதல் மற்றும் குருபோற்றி கோடியர்ச்சனை செய்தல் ஆகியவற்றை அங்கீகரித்து, உலக சாதனை முனையத்தின் அதிகாரப்பூர்வ நடுவர் ஆலிஸ் ரெனாடு ப்ரான்ஸ் அவர்கள் உலக சாதனைக்கான சான்றிதழை லட்சுமி பங்காரு அடிகளாரிடம் வழங்கினார். விழாவிற்கு ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர்கள் கோ.ப. அன்பழகன், கோ.ப. செந்தில் குமார், ஸ்ரீதேவி பங்காரு ஆகியோர் முன்னிலை வகிக்க, கலவை பொறியியல் கல்லூரி தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக இலங்கைக்கான தென்னிந்தியத் தூதரகத் துணை ஆணையர் கணேச நாதன் கீதீஸ்வரன், இஸ்ரோ துணைத் தலைவர் விஞ்ஞானி கண்ணு, முன்னாள் எம்பி துரை மற்றும் முன்னாள் எம்எல்ஏ மணி ஆகியோர் கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரமேஷ், லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அகத்தியன் மற்றும் மருத்துவர்கள் மதுமலர், பிரசன்ன வெங்கடேஷ், ஷாலினி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, பக்தர்களின் பொது பாத பூஜையும் அருள் தரிசனமும் நடைபெற்றது. ஆன்மிகமும் சமூக சேவையும் இணைந்து நடைபெறும் இந்த விழா, தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.














