சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் அப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பன்னீர்செல்வம் தெருவில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பஞ்சமி நிலத்தில் 91 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மனு அளித்தும் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தில் ஆவனங்களை வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தியதுடன் இதுவரை தங்களுக்கு குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள கிராம மக்கள் மேலும் அப்பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்து வரும் தங்களை காவல்துறையின் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தங்களுக்கான இடத்தில் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் குறைதீர் முகாமில் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















