வலங்கைமான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைதுறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 5.6 கிலோமீட்டர் தூரத்துக்கு 13 மீட்டர் அகலத்துடன் கடின புருவங்களுடன் கூடிய இரு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன்
தலைமையில் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இணைந்து புறவழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டும் பணியை துவக்கி வைத்தனர். வலங்கைமான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட இந்த சாலைக்காக, திருவாரூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான், மேலவிடயல், சித்தன்வாழூர், தொழுவூர், செம்மங்குடி உள்ளிட்ட 5 கிராமங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தில்லையம்பூர், விசலூர் உள்ளிட்ட 2 கிராமங்கள் என மொத்தம் ஏழு கிராமங்களில் 17.75 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு 4.86 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 73.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த புறவழிச் சாலை அமைக்கும் இந்த 5.6 கிலோமீட்டர் தூரத்தில் 36 சிறு பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பரசு மற்றும் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













