திருவள்ளூர் அருகே 15 கிராமத்தை சேர்ந்த 540 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கசவநல்லாத்தூர், அகரம், புதுமாவிலங்கை, சத்தரை, கூவம், இருளஞ்சேரி, இராமன்கோயில், விடையூர், உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் நீண்ட காலமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை வீட்டு மனை பட்டா கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளிடத்தில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். ஆனால் வீட்டுமனை பட்டா கிடைக்காததால் கிராமமக்கள் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முயற்சியால் வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்த 15 கிராமத்தை சேர்ந்த 540 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கம் நிகழ்ச்சி திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் கடம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். முன்னதாக கொப்பூர் அடுத்த புதுவள்ளூர் ஊராட்சியில் பால்வாடி தெருவில் வசிக்கும் விமலா மாரிமுத்து என்பவரின் வீடு முழுவதும் எரிந்து நாசமாயின இதனை அடுத்து தகவல் அறிந்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நேரில் சென்று வீடு இழந்த குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

















