தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் தற்போதே உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, அமமுக, தமாகா மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் அதிமுக தலைமை தற்போது பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது. கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு விருப்பமான மற்றும் செல்வாக்கு மிக்கத் தொகுதிகளைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதால், அவர்களுக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முடியாமல் அதிமுக திணறி வருகிறது. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கையுடன் கூறி வந்தாலும், இதுவரை புதிய வரவுகள் எதுவும் இல்லாதது அக்கட்சியினரிடையே ஒருவிதத் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், அதிமுக ஒரு புதிய தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுக சற்று பலவீனமாக இருப்பதாகக் கருதப்படும் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யத் தலைமை முடிவு செய்துள்ளது. அந்த வகையில், திருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 41 சட்டமன்றத் தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கே வழங்கிவிடலாம் என்ற முடிவுக்கு அதிமுக தலைமை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அந்தப் பகுதிகளில் நீண்டகாலமாகக் களப்பணியாற்றி வரும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கடும் கலக்கமடைந்துள்ளனர். தங்களுக்கான வாய்ப்பு பறிபோகும் என்பதால், அவர்கள் மாற்றுத் தொகுதிகளைத் தேடிச் சென்று போட்டியிட இப்போதே திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் 38-ஐ திமுக கூட்டணியே தட்டிச் சென்றது. அதிமுக தரப்பில் சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகிய மூவர் மட்டுமே நூலிழையில் வெற்றி பெற்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளில் மத்திய மண்டலப் பகுதிகளில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் தாக்கம் மக்களிடையே பலமாக இருப்பதால், இப்பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு கடந்த முறையை விடச் சரிந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, ரிஸ்க் எடுக்க விரும்பாத அதிமுக தலைமை, இந்த 41 தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துவிட்டுப் பிற மண்டலங்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
















