தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையான குமுளி மலைச்சாலையில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத்தன்று, அதிகாலை முதலே மலைப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவை முன்னிட்டு, வழிவிடும் முருகனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் மஹா அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, ராஜ அலங்காரத்தில் கந்தன் காட்சியளித்தார். வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட முருகப் பெருமானின் திவ்ய தரிசனம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இவ்விழாவில் கம்பம், கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 6 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து “அரோகரா” முழக்கத்துடன் முருகனை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றனர். குமுளி மலைப்பாதையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் வழிவிடும் முருகனை வணங்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், லெமன் சாதம் மற்றும் மணமணக்கும் வெஜிடபிள் பிரியாணி ஆகிய அறுசுவை சைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. மலைச்சரிவில் அமைந்துள்ள இக்கோவிலில் திரண்ட பக்தர்களின் கூட்டம் மற்றும் ஆன்மீக அதிர்வலைகளால் ஒட்டுமொத்த குமுளி மலைச்சாலையுமே தைப்பூசத் திருநாளில் பக்தி மயமாகக் காட்சியளித்தது.

















