தமிழக அரசுப் பள்ளிகளின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவும், மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் ‘அரசு பள்ளி தூதுவர்’ மற்றும் ‘முன்னாள் மாணவர் வழிகாட்டுதல்’ ஆகிய புதிய திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் படித்து இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் ஆளுமைகளை மீண்டும் தங்களின் தாய் மடிக்கு அழைத்து வரும் நோக்கில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் ‘விழுதுகள்’ என்ற பிரத்யேக செயலியையும் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பி. சந்திரமோகன், துறை இயக்குநர் ச. கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.அ. நரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் திட்டக்குழுச் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மற்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தங்களின் அனுபவங்கள் மூலம் உத்வேகம் அளித்தனர். மேலும், மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் ஆர். சுதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், “மயில்சாமி அண்ணாதுரை மற்றும் நாராயணன் போன்ற உலகளாவிய ஆளுமைகள் தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து அதிகம் உருவாக வேண்டும் என்பதே முதலமைச்சரின் கனவு. உயர்ந்த நிலையில் இருக்கும் ஆளுமைகள் ‘பள்ளி தூதுவர்களாக’ அரசுப் பள்ளிகளில் அடியெடுத்து வைத்தால், அது மாணவர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். முன்னாள் மாணவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமன்றி, பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஒரு பக்கபலமாக இருக்க வேண்டும். இந்தத் துறைக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்னாள் மாணவர்கள் வழங்கினால், அதனைச் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த ‘விழுதுகள்’ செயலி மூலம் உலகெங்கிலும் உள்ள முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளிகளுடன் டிஜிட்டல் முறையில் இணைந்து, தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டவும், பள்ளி உட்கட்டமைப்பிற்கு உதவவும் ஒரு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது.
















