தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சூரி, பஞ்சமி நாயகி என்ற போட்டியாளரிடம் “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர்? அவர்களுக்கு காதணி விழா நடத்தியீர்களா?” என கேள்வி எழுப்பினார். பஞ்சமி “இல்லை” என்று பதிலளித்ததையடுத்து, “உங்கள் பிள்ளைகளுக்கு நான் தாய்மாமனாக இருந்து காதணி விழா நடத்தி வைக்கிறேன்” என்று நேரில் உறுதியளித்தார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சமி நாயகி – மணிகண்டன் தம்பதியரின் மூன்று பிள்ளைகளான தர்ஷித், அசோக மித்ரன் மற்றும் ஆதித்யா வர்மாவுக்கு, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காதணி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சூரி தாய்மாமனாக கலந்து கொண்டு, குழந்தைகளின் தலையை மொட்டையிட்டு, அவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் சீர்வரிசைகளை வழங்கினார். விழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, “மாமன்” திரைப்பட இயக்குநர் பிரசாந்த், நடிகர் சூரி மற்றும் பஞ்சமியின் சகோதரர் கலைத்தென்றல் ஆகிய மூவரின் மடியிலும் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
விழா முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சூரி, “லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நான் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. விஜய், உதயநிதி இருவரும் எனக்கு மிகவும் வேண்டியவர்கள்” என்று உருக்கமாக தெரிவித்தார்.