நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவது குறித்து, மத்திய அரசின் அணுகுமுறையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் அரசியல் கருவிகளாக மாற்றப்படக் கூடாது என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் வலியுறுத்தியுள்ளார்.
விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜன நாயகன்’ படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் 2025 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், பின்னர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியீடு என மாற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடித்து வருவதால், படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கிரிஸ் ஜோடங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மத்திய அரசை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
அந்த பதிவில், “பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள தற்போதைய சூழல், அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் ஒரு கலைஞரின் படைப்பை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசியல் லாபத்திற்காக திரைப்படங்களை தணிக்கை செய்வதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் அரசியல் மோதல்களின் கருவிகளாக மாறாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு ஏற்படும் அழுத்தங்களால் ஒரு திரைப்படம் தாமதங்களை சந்திப்பது தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நியாயமல்ல” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அரசியலை கலைத்துறையிலிருந்து விலக்கி வைத்து, படைப்பாற்றல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது அரசியல்வாதி விஜயை; நடிகர் விஜயை அல்ல. மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் வேலை செய்யாது” என தனது பதிவில் கிரிஸ் ஜோடங்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

















