பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான சர்ச்சை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, மகளிர் ஆணையம் இருவரையும் அழைத்து நேரில் விசாரணை நடத்தியது.
இதற்கிடையில் ஜாய் கிரிசில்டா, தன்னுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி, குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயராக மாதம்பட்டி ரங்கராஜ் என பதிவு செய்யப்பட்டிருப்பதை வெளியிட்டார். மேலும், விசாரணையின் போது ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது என்பதை ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இதை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்” என விளக்கம் அளித்தார். மேலும், “டிஎன்ஏ பரிசோதனையில் அந்தக் குழந்தை எனது குழந்தை என நிரூபிக்கப்பட்டால், அவனை வாழ்நாள் முழுவதும் நான் கவனித்துக்கொள்வேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேநேரத்தில், தனது புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை என குற்றம் சாட்டி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிசில்டா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு காவல்துறைக்கு நவம்பர் 12ஆம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, தனது கணவருக்கு முழு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“என் கணவரிடம் இருந்து பணம் பறிப்பதே ஜாய் கிரிசில்டாவின் நோக்கம். எங்கள் குடும்ப வாழ்க்கையை நாசம் செய்ய அவர் முயற்சிக்கிறார். என்னுடைய கணவர் ரங்கராஜுக்கு ஆதரவாக இறுதி வரை நிற்பேன்,” என ஸ்ருதி வாக்குறுதியளித்தார்.

















