பஞ்சாப்: பிரபல பஞ்சாபி நடிகர் மற்றும் பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்களுக்கும் திரையுலகத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருதாஸ்பூர் பூர்வீகமாக ஜலந்தர் நகரில் வசித்த வரிந்தர் குமான், பல ஆண்டுகளாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தவர். ‘சைவ பாடிபில்டர்’ என்று அழைக்கப்பட்ட இவர், உடல் கட்டுமானம் மற்றும் உடற்பயிற்சியில் தனித்துவமான ஆர்வத்துடன் அறியப்பட்டார். மேலும், தனது உடற்பயிற்சி முறைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டு ரசிகர்களை ஈர்த்தார்.
திரைப்படத் துறையில் வரிந்தர் குமான் தனித்துவமான இடத்தை பெற்றிருந்தார். கடைசியாக அவர், சல்மான் கானின் டைகர் 3 படத்தில் நடித்தார். முன்பு, 2014ல் ரோர்: டைகர்ஸ் ஆஃப் சுந்தர்பன்ஸ் மற்றும் 2019ல் மர்ஜாவன் போன்ற இந்தி படங்களிலும் அவர் நடித்திருந்தார். பஞ்சாபி திரைப்படமான கபடி ஒன்ஸ் அகெய்ன் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
அவருக்கு 2009ல் மிஸ்டர் இந்தியா பட்டமும், மிஸ்டர் ஆசியா போட்டியில் இரண்டாவது இடமும் கிடைத்தது. 2027ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மாரடைப்பால் அவருடைய மரணம் நடந்தது என்று மருமகன் அமன்ஜோத் சிங் குமான் தெரிவித்தார். மரணத்திற்கு முன்பு தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட அவர், அமிர்தசரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், உயிர் காப்பாற்ற முடியவில்லை என்று மேலாளர் யத்விந்தர் சிங் கூறியுள்ளார்.
வரிந்தர் குமான் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

















