சென்னை:
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம் முன்பு, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, ஏர்போர்ட் மூர்த்தி இன்று டிஜிபி அலுவலகம் வந்திருந்தார். அப்போது, நுழைவு வாயிலில் நான்கு பேர் கொண்ட குழுவினர் அவரை திடீரெனச் சரமாரியாக தாக்கினர்.
ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளை முன்வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதனால் கோபமடைந்த விசிகவினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மூர்த்தி மீது செருப்பால் அடிக்கவும், அவமதிக்கவும் அந்தக் குழுவினர் முயன்றுள்ளனர்.
தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில், போலீசார் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி, “காவல்துறைக்கும் அரசுக்கும் தெரிந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 
			















