விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு.
விழுப்புரம்: –
தமிழ்நாடு பசுமை இயக்கம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறை சார்பில் தேக்கு, செம்மரம், சந்தனம், மகாகனி, வேங்கை, இருவடி, பலா உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. வீடுகளுக்கு தேவையான வாசற்படி, ஜன்னல் மற்றும் மரச்சாமான்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இம்மரங்களுக்கு எதிர்காலத்தில் அதிக தேவை இருப்பதால், விவசாயிகளுக்கு நீண்டகால வருமானம் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புங்கன், நாவல், புளி, இலுப்பை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளும் ஏரிகள், பொது இடங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் சமுதாய இடங்களில் நடவு செய்யப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகளை வழங்குவதோடு மட்டுமின்றி, அவற்றை நடவு செய்வதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வனத்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். குறிப்பாக, தரிசாக உள்ள விவசாய நிலங்களில் மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்வு செய்து, நடவு முதல் வளர்ப்பு வரை தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் வனச்சரக அலுவலர் குப்புசாமி மற்றும் விழுப்புரம்-2 வனச்சரக அலுவலர் பாரத் ஆகியோரது சரகங்களில் தலா 1.50 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.விக்கிரவாண்டி அருகே மேலகொந்தை மற்றும் செஞ்சி அருகே தீவனூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நர்சரிகளில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறை அலுவலகங்களை அணுகி மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொண்டு நடவு செய்து பயன்பெறலாம் என வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தரிசு நிலங்களை பசுமையாக்கி, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
வனத்துறை அதிகாரி பேட்டி உள்ளது.















