கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அவ்வப்போது ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தும் வாகனங்கள் போலீசார் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வந்தாலும், கடத்தல் ஜரூராக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனி தாசில்தார் பாரதி மார்த்தாண்டம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ரேஷன் அரிசி கடத்தல் வாகனம் எஸ்கார்டு பைக்கை பின்தொடர்ந்து வந்த போது அதை நிறுத்த சைகை செய்தும் டிரைவர் வேகமாக கொண்டு சென்றார். இதை தொடர்ந்து அந்த சொகுசு காரை பெண் அதிகாரி ஜீப்பில் துரத்தி சென்றார்.
தொடர்ந்து சேசிங் செய்தும் எஸ்காடு வந்த பைக் கடத்தல் வாகனத்தோடு சேர்ந்து சென்றதால் கடத்தல் வாகனத்திற்கு முன் சென்று காரை மடக்கி பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் சுமார் 15 கிலோ மீட்டர் துரத்தி சென்றனர். தமிழக கேரள எல்லை பகுதியான அருமனை அருகே புலியூர் சாலை வரை சினிமா காட்சிகளை போல கடத்தல் வாகனத்தை சேசிங் செய்து பிடிக்க முயன்றதும், கார் கேரளாவுக்குள் நுழைந்து மாயமானது.
கடத்தல் வாகனம் குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் அதிகாரியின் சேசிங் வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.