சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைமேடு கிராமத்தில் தார் சாலை அமைக்கவும்,தடையின்றிகுடிநீர் வழங்க கோரியும், புதிய நீர் தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைமேடு கிராமம் அண்ணா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைவரும் அங்கேயே உணவருந்தி குடிநீர் வழங்க வலியுறுத்தியும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரியுய் கோங்களை எழுப்பி தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முடிவில் உடனடியாக தடையின்றி குடிநீர் வழங்கவும், விரைவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,புதிய சாலை அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.