“மருதநாயகம் படம் வெளியாகுமா ?” – கமல்ஹாசன் சொன்ன பதில் என்ன ?

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா (IFFI)–வில், கோல்டன் பீகாக் விருதிற்கான பட்டியலில் இந்த வாரம் ‘அமரன்’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து மொத்தம் 3 திரைப்படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட, அவற்றில் ஒன்றாக அமரன் நாளை நடைபெறும் திரையிடலில் பங்கேற்கிறது. இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட குழுவினர் கோவாவுக்கு பயணம் செய்தனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “அமரன் திரைப்படம் சர்வதேச விருதிற்குத் தேர்வாகியுள்ளது. அதற்கான அழைப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தது. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் வேறொரு தளம்; ஆனால் ‘சினிமா நாடு’ என வரும் பொழுது அது எல்லோரையும் ஒன்றாக இணைக்கிறது. நாட்டிற்கான படமாக அமரன் உருவாகியுள்ளது. மூன்று படைகளையும் இணைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் என் கனவு” என தெரிவித்தார்.

பின்னர் ‘மருதநாயகம்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அதுவும் சாத்தியம் தான் என நான் நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “ஒரு வருடமாக ‘அமரன்’ எனக்கு தொடர்ந்து பல வாய்ப்புகளையும் அனுபவங்களையும் தந்து வருகிறது. இது இன்னும் தொடரும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்ததாவது :
“இந்தாண்டு திரையிடப்படும் சர்வதேச படங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக அமரன் திரையிடப்படுவது மிக பெரிய மகிழ்ச்சி. தமிழ்த் திரைப்படம் இவ்விழாவில் முதல் முறையாக தேர்வாகியது பெருமை அளிக்கிறது” என அவர் கூறினார்.

Exit mobile version