தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை, ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் உதகை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவி நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கவுள்ளார் என்பது அரசியல் வெடிகுண்டாக அமைந்துள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம், துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை, மாநில அரசுகளுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ரவி இந்த மாநாட்டை நடத்துவது சட்ட விரோதம் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதே நேரத்தில், ஆளுநர் ரவி நேரில் சென்று ஜெகதீப் தன்கரிடம் இந்த மாநாட்டுக்கான அழைப்பை வழங்கினார். இந்த அழைப்பை ஏற்று ஜெகதீப் தன்கர் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதனால் அரசியல் சூழ்நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.
முன்னதாக, குடியரசுத் தலைவர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க கூடாது என ஜெகதீப் தன்கர் பேசியதும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்ததும், அவருக்கு எதிர்ப்பு கிளம்ப காரணமாகி இருந்தது.
தற்போதைய சூழ்நிலையில், மாநில அமைச்சர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கலாம் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.
ஜெகதீப் தன்கர் ஏப்ரல் 25 அன்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த பின் ஹெலிகாப்டர் மூலம் உதகமண்டலத்திற்கு செல்ல உள்ளார். மாநாட்டுக்குப் பிறகு தோடர் பழங்குடியினரின் ஆலயத்தையும் அவர் பார்வையிட உள்ளார். ஏப்ரல் 26 அன்று அவர் உதகமண்டலத்தை விட்டு புறப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.