சென்னை – கீழடி அகழ்வாராய்ச்சி விவகாரத்தில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், “தொல்லியல் தரவுகளை அரசியலாக்காமல், மேலும் அறிவியல் ஆதாரங்களைத் திரட்டும் வகையில் மத்திய அரசும் ஆதரிக்கத் தயாராக உள்ளது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அறிக்கைக்கு எதிர்வினையாக பிரபல கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, விவாதத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளார்.
அதில் அவர்,
“அமைச்சர் ஷெகாவத் அவர்கள் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையெனச் சொல்வதன் மூலம், தமிழரின் வரலாற்று பெருமையை மறைக்க முயல்கிறார்,”
என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க சோதனைச் சாலை ஆதாரம் !
வழக்கமான இந்திய சோதனை மையங்களில் அல்லாமல், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நடுநிலையான சோதனைச் சாலையில் மேற்கொள்ளப்பட்ட கரிமச் சோதனைகளால், கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் பழமை நிலை நிரூபிக்கப்பட்டிருப்பதை வைரமுத்து வலியுறுத்துகிறார்.
“சில தரவுகள் அறிவியலின்பாற் பட்டவை; சில தரவுகள் நம்பிக்கையின்பாற் பட்டவை. ராமர் என்பது ஒரு தொன்மை — அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடி — அறிவியல் ஆதாரங்களோடு மிளிரும் தொன்மை,”
என்று அவர் வலியுறுத்துகிறார்.
“தொன்மைக்கு ஒரு நீதியா ?”
“ராமரின் தொன்மையை ஏற்றுக்கொள்ளும் அரசியல் வாதிகள், கீழடியின் அறிவியல் ஆதாரங்களையும் ஏற்க வேண்டியது நியாயம். ஒரு தொன்மைக்கு ஒண்ணு, இன்னொரு தொன்மைக்கு வேறொரு நீதியா?”
என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
தமிழரின் நெஞ்சம் கொதிக்கிறது
இந்த விவகாரம் தமிழர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், “தமிழ் இனத்தின் தொன்மையை இந்தியத்தின் தொன்மையென கொண்டாட எங்களுக்கு மறுப்பில்லை” எனும் உடனிருப்பையும் பதிவு செய்துள்ளார்.
பாரதியாரின் வரிகளை மேற்கோளாகக் கொண்டு ,
“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,”
என கூறி, தமிழர் வரலாறு மீதான பெருமையை மீளக் குறிப்பிட்டுள்ளார்.