டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது;
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் உள்ள டாட்டூஸ் கடையில் விலை பேசும்போது ஏற்பட்ட தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் விடுத்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை வேளாங்கண்ணி போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த தாசன் மகன் கவுதம் . இவர் கடற்கரை சாலையில் உள்ள டாட்டூஸ் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்தக் கடைக்கு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்த பெஞ்சமின் மகன் கிறிஸ்டோவினிஸ் மற்றும் வெட்டிஉன்னிமடத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் மகேஷ்குமார் ஆகியோர் டாட்டூஸ் போட வந்துள்ளனர்.
அப்போது டாட்டூ விலை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிறிஸ்டோவினிஸ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காட்டி நாங்கள் கன்னியாகுமரி ரவுடி எனக் கூறி கவுதமை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம் உடனடியாக வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கிறிஸ்டோவினிஸ் மற்றும் மகேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
