வாஷிங்டன்/டெல்லி, மே 17: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தயாரித்துள்ள புதிய வரிவிதிப்பு மசோதா, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதையின் கீழ், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் பணியாளர்கள் மீது 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டபூர்வ குடியிருப்பாளர்களுக்கு நேரும் தாக்கம்
அமெரிக்காவில் சட்டபூர்வமாக 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் மட்டும் 45 லட்சம் பேர் இந்தியர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3.45 லட்சம் பேர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 12.3 லட்சம் பேர், கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
இந்த புதிய வரி விதிப்பு அமலாகும் பட்சத்தில், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பும் போதும், இந்திய பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் போதும் 5% வரி பிடித்தம் செய்யப்படும்.
₹1 லட்சம் அனுப்பினால் ₹5,000 வரி பிடிக்கப்படும்.
1.6 பில்லியன் டாலர் இழப்பாகும் என கணிப்பு
2023-24ஆம் ஆண்டில், இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து $118.7 பில்லியன் அனுப்பினர். இதில் $32 பில்லியன் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டது. புதிய வரி அமலுக்கு வந்தால், இந்தியர்களுக்கு மட்டும் $1.6 பில்லியன் இழப்பாக ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது.
சட்டவிரோத வழிகள் பக்கம்?
பண அனுப்பும் நேரத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழியாக செலுத்தும் வரியை தவிர்க்க சிலர் கிரிப்டோகரன்சி போன்ற சட்டவிரோத வழிகளில் பணம் அனுப்ப முயற்சி செய்யக்கூடும் என்ற அபாயமும் எழுந்துள்ளது. ஆனால் இது பல்வேறு சட்டசிக்கல்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மெக்ஸிகோ அதிபர் கடும் கண்டனம்
இந்த மசோதாவை மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடுமையாக எதிர்த்து கூறியதாவது:
“மெக்ஸிகோ மக்கள் அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர். இப்போது புதிய வரி விதிப்பு என்பது நியாயமற்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசித்து, இந்த வரியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”
மேலும், மெக்ஸிகோவின் பொருளாதாரத்தில் 4% வருமானம், அமெரிக்க வாழ் மெக்ஸிகோ மக்கள் அனுப்பும் பணத்திலிருந்தே வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மசோதா எப்போது அமலுக்கு வரும்?
- மே மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜூலை 2025ல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் வாழும் மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், குறிப்பாக குடும்ப செலவுக்காக மாதந்தோறும் பணம் அனுப்பும் தொழிலாளர்கள், கல்வி மற்றும் வேலைக்காக இடம்பெயர்ந்தோர் எல்லோரும் பெரும் நிதிச்சுமையை எதிர்நோக்க நேரிடும்.
இந்த வரி அமலுக்குள் வந்தால், இந்திய அரசு இதற்கும் பதிலளிக்குமா என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.