சீர்காழி அருகே சோகம்: சவுடு மண் குவாரியில் குளித்த துபாய் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, சவுடு மண் குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் வேலை பார்த்துவிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்த வாலிபர், நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரித்விராஜ் (28). இவர் துபாயில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இன்று பிரித்விராஜ் தனது நண்பர்களான முகமது, முரளி உள்ளிட்ட ஐந்து பேருடன் சேர்ந்து கேவரோடை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சவுடு மண் குவாரியில், மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் அனைவரும் குளித்துள்ளனர்.
குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பிரித்விராஜ் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். திடீரென அவர் நீரில் மூழ்கி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக இதுகுறித்து அருகில் இருந்தவர்களுக்கும், புதுப்பட்டினம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுப்பட்டினம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் உடல் கிடைக்காத நிலையில், மீனவர்களின் வலைகளைப் பயன்படுத்தி மீண்டும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
சுமார் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பிரித்விராஜின் உடல் மீன் வலையில் சிக்கியது. மீட்கப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்காக ஊருக்கு வந்த வாலிபர் குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பாதரக்குடி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
