கோவை:
“இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல; தமிழ்நாடு என்பதை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும். அதற்காக 2026 சட்டசபைத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்!” என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் உரையாற்றினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (ஏப்ரல் 27) கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசு விழாக்களில் பங்கேற்றதுடன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
திராவிட இயக்கத்தின் கோட்டை – கோவை
திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “கோவையில் இந்த மாநாடு நடைபெறுவது முக்கியம். கோவை என்றென்றும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதைக் காண்பிக்கும் வகையில் இது நடக்கிறது. சட்டமன்றத்தில் பேசுவதைவிட இந்த மாநாட்டில் கலந்துகொள்வதே முக்கியம்” என்று கூறினார்.
“நான் பெரியாரின் கொள்கைப் பேரன்”
உதயநிதி: “தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டது சுயமரியாதை இயக்கம் தான். பெரியார் தனது வாழ்நாளில் 13.20 லட்சம் கி.மீ பயணித்து, 10,700 பொதுக்கூட்டங்களில் பேசினார். திமுக இளைஞரணிச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் ஆகிய பதவிகளைவிட, பெரியாரின் கொள்கைப் பேரனாக இருப்பதில் தான் நான் பெருமை கொள்கிறேன். சாதிப் பெயரை மக்கள் பின்னால் பயன்படுத்தாத நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது இந்த இயக்கத்தின் வெற்றி” என்றார்.
“ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே பாசிஸ்ட்களுக்கு பயம்”
“திமுக ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் நடைமுறைக்கொண்டு வருகின்றன. இதனால் பாசிஸ்ட்கள் வெறித்தனமாகக் கதறுகிறார்கள். பாஜகவோடு சேர்ந்து அதிமுகவும் கதறுகிறது. தமிழகத்தையும் இந்தியாவையும் காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவரது பெயரைக் கேட்டாலே பாசிஸ்ட்கள் பயப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
“2026 தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்”
உதயநிதி மேலும் கூறுகையில், “இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல; தமிழ்நாடு. இந்த உண்மையை நிரூபிக்க, 2026 சட்டசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும்.
திராவிட திட்டங்களால் பெண்களும் தொழில் முனைவோர்களாகி, கல்வியில் முன்னேறி வருகின்றனர். சாதிப் பெயரில்லா சமூகத்தை உருவாக்கிய பெருமை தமிழகத்திற்கு சொந்தம். திமுகவின் கடைசி தொண்டன் உயிரோடு இருக்கும் வரை பாஜகவின் கனவு நனவாகாது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய அதிமுக மீண்டும் கூட்டணியில் சேர்ந்தது. பாஜகவுக்கு நேருக்கு நேர் எதிர்கொள்பது திமுக தான். வரவிருக்கும் தேர்தலில் திமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும்” என்றார்