டெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடருமா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது மூன்று குற்றவழக்குகள் இருந்தன. இதனைக் கொண்டு அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்தது.
2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பலமுறை ஜாமீன் கோரியிருந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 471 நாட்கள் கழித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் பெற்ற இரண்டு நாட்களில் அவர் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து வித்யா குமார் என்பவர் மற்றும் அமலாக்கத்துறை இருவரும் ஜாமீன் ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு, “ஜாமீனா அல்லது அமைச்சர் பதவியா?” என்ற கடுமையான கேள்வியை செந்தில் பாலாஜிக்கு எழுப்பியது. பதிலளிக்க ஏப்ரல் 28க்குள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜி நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடர வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. முக்கிய உத்தரவு இன்று பிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.