திருவாரூர் மாவட்டம் மாவூர் கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (வயது 56) என்ற விவசாயி, அவரது வீட்டின் அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மதிவாணனின் மனைவி கார்த்திகை செல்வி அளித்த புகாரின் அடிப்படையில், அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது சந்தேகத்திற்கிடமான காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மதிவாணன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்துகள் உட்கொண்டு வந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.