“திருவள்ளுவர் சனாதன புலவர் ” – ஆளுநர் ரவி கருத்துக்கு கடுமையான கண்டனம் !

சென்னை : “திருக்குறள் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டது” என்றும், “திருவள்ளுவர் சனாதான மரபின் மாபெரும் தெய்வப்புலவர்” என்றும் கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் பல்வேறு தரப்புகளில் கண்டனத்தை உருவாக்கியுள்ளன.

தமிழக ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவி, கடந்த சில மாதங்களாக சனாதன தர்மம் குறித்த கருத்துகளை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில், தேசிய கல்விக் கொள்கையின் அடிநாதமாக திருவள்ளுவர் உள்ளார் என்றும், புதிய கல்விக் கொள்கை உருவாகவும் அவர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், வைகாசி அனுஷம் தினத்தில், “திருவள்ளுவர் சனாதான மரபின் மாபெரும் தெய்வப்புலவர்” என்று எக்ஸ் (முன்னைய ட்விட்டர்) தளத்தில் ஆளுநர் பதிவிட்ட கருத்து, புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் மற்றும் இலக்கியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் கண்டனம் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “திருக்குறள் சனாதனத்திற்கும், புதிய கல்விக் கொள்கைக்கும் எதிரானது” எனக் கூறியுள்ளார். மேலும், “ஆளுநர் ஒரு ஆர்எஸ்எஸ் சாரார் என்பதால், பாஜகவின் வளர்ச்சிக்காகத் தமிழ், திருக்குறள், பாரதியை சனாதனத்தோடு இணைத்துப் பேசுகிறார்” எனவும் குற்றம்சாட்டினார்.

சபாநாயகர் கேள்வி :

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “ஆளுநருக்கு திருக்குறளின் ஆழம் புரிய வாய்ப்பில்லை” என்று விமர்சித்தார். மேலும், “ஆங்கிலேயர்களின் கல்வியை விமர்சிக்கும் ஆளுநர், அவர்களே உருவாக்கிய ஆளுநர் பதவியை விட்டுவிட தயாரா?” என்று சுட்டிக்காட்டினார்.

அறிஞர்களின் எதிர்வினை :

தமிழ் அறிஞர்கள், கலாச்சார ஆர்வலர்கள், சமூக வலைதளங்களில் இந்த கருத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “திருவள்ளுவர் ஒரு உலகப்புகழ் பெற்ற மனிதநேயம் சார்ந்த புலவர். அவரை சனாதனத்துடன் இணைப்பது வரலாற்று மற்றும் இலக்கியத் தவறாகும்” என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version