திருத்துறைப்பூண்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கூரை சிமெண்ட் காரை இடிந்து விழுந்து சேதம் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை புதிய கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது
இந்த சுகாதார நிலையத்திற்கு ராயநல்லூர், விளக்குடி, பனையூர், கொத்தமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் சிகிச்சை பெற வருகின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் இங்கு மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ராயநல்லூர் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் மற்றும் அவரது மனைவி மல்லீஸ்வரி ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மல்லீஸ்வரிக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தபோது, கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த காரை மற்றும் சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து கீழே நின்று கொண்டிருந்த அறிவழகன் அருகில் திடீரென விழுந்தது அருகிலேயே நின்றிருந்த அவரது மனைவி மல்லீஸ்வரி அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர்தப்பினார். மேலும் சில அடி தூரத்தில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இருந்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பழுதடைந்த இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழைய கட்டிடத்தை உடனடியாக அகற்றி, நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை கட்டித் தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













