மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கிராமத்தில் வயலில் ஏற்பட்ட தகராறில், விவசாய கூலித்தொழிலாளியை வீடுபுகுந்து கட்டை, இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்த தம்பதிக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலைஞாயிறு தெற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம். அதே தெருவை சேர்ந்தவர் சுசிலா. இவர்கள் இருவரும் விவசாய கூலித் தொழிலாளிகள். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31-ஆம் தேதி வயலில் வேலை பார்த்த போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சுசிலா மற்றும் அவரது கணவர் லெட்சுமணன் ஆகியோர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரை கட்டை மற்றும் இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, பன்னீர்செல்வத்தின் மனைவி அன்புசெல்வி அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் மணல்மேடு போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். இதனிடையே, மருத்துவமனையில் பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இவ்வழக்கானது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, லெட்சுமணன் (54), சுசிலா(49) இருவரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து, அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து இன்று(செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
