புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற குருத்தோலை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி,ஓசன்னா பாடலை பாடி பவனி:
இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகமுழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மாதம் பிப்ரவரி 18 ம் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஜெபம், தவம், தானம் செய்து இறைவனின் அருளையும், ஆசியையும் வேண்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தநாள் புனித வெள்ளி என்றும், மூன்றாம்நாள் உயிர்தொழுந்த தினம் ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி ஓசன்னா கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி அடுத்த மாதம் 3ம் தேதியும் ஈஸ்டர் பண்டிகை 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
