மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் ஆலயத்தின் பங்குனி உத்திர பெருந்திருவிழாவை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்திலும் ஆண்டாள் அன்ன வாகனத்திலும் சேனை முதல்வரோடு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில்,22வது திவ்ய தேசமும் காவிரிக்கரையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களுல் ஐந்தாவது ஆலயமுமான பரிமள ரெங்கநாதர் கோவில் சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த தலம். இக்கோயிலில் பங்குனி உத்திரபெருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. .விழாவின் முக்கிய நிகழ்வாக பெருமாள் ஓலைசப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் கருட வாகனத்தில் பெருமாளும், அன்னவாகனத்தில் ஆண்டாள் மற்றும் சேனை முதல்வர் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து பெருமாள், ஆண்டாள், சேனை முதல்வர் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி நடைபெற்ற வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தேரோடும் வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.
