ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
ஆழித்தேர் என்ற பெயருக்கு ஏற்றார் போல் இத்தேரானது 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்டு பிரம்மாண்டமாக ஆடி அசைந்து 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
உலகில் காணும் தேர்களில் ஆழி என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் திருவாரூர் ஆழித்தேர் மற்ற தேர்களை காட்டிலும் வித்தியாசமாக எண்கோண வடிவிலான தேரின் கட்டுமானமும், தேரின் முன்புறம் நிறுவப்படும் பிரமாண்டமான கலைநயமிக்க குதிரை பொம்மைகளுடன் 350 டன் எடையளவு கொண்ட ஆழித்தேர் இன்று ஆலய ராஜ வீதிகளில் அசைந்தாடி வலம் வருகிறது
கோவில்களின் கோவில் எனவும் அழைக்கப்படும் புராதன சிறப்புவாய்ந்த ஆலயம். இந்தியாவிலேயே அதிகமான சன்னதிகளை கொண்ட ஆலயமாகவும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் விளங்குகிறது.
பொதுவாக ஊர் பெயரை சொல்லும்போது அவ்வூரின் சிறப்பு அம்சம் முன்பு கூறப்படும். அந்த வகையில் திருவாரூர் என்றால் தேரழகு என்பதற்கு ஏற்ப பங்குனி உற்சவ பெருவிழாவின் சிறப்பு விழாவான ஆயில்ய நட்சத்திரத்தன்று உலக பிரச்சித்தி பெற்ற ஆழித்தேரோட்டத்தினை பற்றியும், தேர் அசைந்துவரும் பேரழகு, தேரோட்டத்தினை நடத்திவைத்த சைவ சமய குறவர்கள் குறித்தும் தேவாரங்களிலும், பெரியபுராணத்திலும், ஆலய கல்வெட்டிலும் சான்றாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பொதுவாக காணப்படும் தேர்களின் வடிவமைப்பினை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக காணப்படுவதால் திருவாரூர் தேரை ஆழி என அடைமொழியோடு அழைக்கப்படுகிறது.
திருவாரூர் ஆழித்தேரானது அதனுடைய மரபீடத்தின் வடிவமைப்பும், அதில் காணும் 500க்கும் மேற்பட்ட கலைநயமிக்க சிற்பங்களும், எண்கோண வடிவில் இத்தேர் வடிவமைப்பும் ஆழித்தேர் கட்டுமானத்தின் இலக்கணமாக இருந்து வருகிறது.
96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட பிரமாண்டமாக ஆழித்தேர் விதியினை ஆக்கிரமித்து நிற்கிரது
தேரின் முன்பக்கம் 4 வேதங்களை அடிப்படையாக கொண்ட 4 குதிரைகள் கட்டப்பட்டு பிரம்மா தேரையொட்ட தேர் பாய்ந்து செல்வது போல் நம் கண்முன் காட்சியளிக்கிறது
தேர் அலங்கரிக்கப்படுவதற்கான 17,467 சதுரடி பரப்பளவு கொண்ட துணி, 4 பிரமாண்டமான குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள், 250 டன் எடை கொண்ட இரும்பு அச்சுகள் ஆகியவற்றை சேர்க்கும்போது தேரின் மொத்த எடையளவானது 350 டன்னை எட்டுகிறது.
சுமார் 350 டன் எடையளவு கொண்ட ஆழித்தேர் வீதிகளில் பக்தர்கள் இழுத்து செல்ல ஏதுவாக 4 டன் எடையளவு கொண்ட ஒவ்வொரு வடமும் சுமார் 240 அடி நீளம் கொண்ட 4 பிரமாண்டமான வடங்கள் கட்டப்பட்டு தேரின் வடத்தினை பற்றி சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களால் இழுக்கப்பட்டு தேர் வீதிகளில் வலம் வருகிறது. பக்தர்கள் தேரை இழுப்பதற்கு ஏதுவாக தேர் சக்கரங்களை உந்த செய்யும் வகையில் 2 புல்டோசர் இயந்திரங்களும் தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் கருன் கரட் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மற்றும் இன்றி வெளி மாநிலங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
பொதுமக்கள். பக்தர்கள், புல்டோசர் இயந்திரம் உள்ளிட்டவை தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் , தேரின் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டு தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்க ஒன்று. இது தவிர தேர்கொத்தனார் தேர் சக்கரங்களில் முட்டுக்கட்டை கொண்டும் தேரோட்டத்தை நடத்துகின்றனர்.
ஆரூர் தியாகராஜர் ஆழித்தேரில் வலம் வருவதை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பாதுகாப்பு பணிக்காக 1500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கீழரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து இறுதியாக மாலை 7 மணி அளவில் நிலை அடியை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
