சென்னை :
அவசர காலங்களில் ரயில் பயணத்திற்கு வசதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் முறையே தற்போது சாமானிய மக்களுக்கு பெரும் துன்பமாக மாறியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தட்கல் டிக்கெட்டிற்காக இணையதளத்தில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இருப்பினும் வெறும் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சி செய்பவர்களில் 90% பேர் இணையதள சிக்கல்கள், சர்வர் முடக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால், அவசர தேவைகளுக்கு ரயில் பயணம் என்பது சாத்தியமற்றதா? என்ற கேள்வி எழுகிறது.
இதற்கிடையில், பொதுமக்களுக்கு கிடைக்காத தட்கல் டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு எளிதில் எப்படிக் கிடைக்கிறது? என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே நிலவிக்கொண்டிருக்கிறது.
இந்தக் கோளாறு குறித்து பல்வேறு புகார்களை அடிப்படையாகக் கொண்டு, IRCTC மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து நாடு முழுவதும் விசாரணைகளை ஆரம்பித்தன. கடந்த ஜனவரி முதல் மே 2025 வரையிலான காலக்கட்டத்தில், தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த 5 நிமிடங்களுக்குள் மட்டும் 2.9 கோடி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக IRCTC தகவல் தெரிவித்துள்ளது.
இதில் அதிர்ச்சி தரத்தக்க வகையில் சுமார் 2.5 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. மேலும் 70 லட்சம் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் மீளாய்வு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்கல் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு கடந்த காலங்களில் 85-90% ஆக இருந்தது. ஆனால் தற்போது அது மிகக் குறைந்த 1.5% ஆகவே உள்ளது. இது பொதுமக்களிடம் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலி கணக்குகள் நீக்கப்பட்டதால் தட்கல் நேரத்தில் இணையதளத்தில் கடும் போக்குவரத்து சற்று குறையலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைகள், சர்வர் சிக்கல்கள் ஆகியவை எப்போது முழுமையாக சரிசெய்யப்படும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே உள்ளது.