சென்னை :
தமிழ்நாடு அரசு சார்பு மதுபானக் கழகம் டாஸ்மாக்-இல் ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கான தொடர் நடவடிக்கையாக, டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அதிகாரிகள் இன்று பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள விசாகனின் இல்லம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் சோதனையில் அமலாக்கத்துறை ஈடுபட்டது.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. விசாகனின் வீட்டில் சோதனை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், அவரது வீட்டு அருகில் கிழிக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல் நகல்கள் கிடைத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றை கைப்பற்றி மீண்டும் வீட்டுக்குள் சென்று விசாரணையை தொடர்ந்து நடத்தினர். சோதனையின் போது விசாகனுடன் அவரது மனைவியும் மகனும் இருந்தனர்.
பின்னர் மாலை 3 மணி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாகனிடம் விசாரணை தொடங்கப்பட்டது. இதில் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள், மதுப் பாட்டில்களின் கொள்முதல், விற்பனை, பணியாளர்களின் பணியிட மாற்றம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதாக தகவல்.
சுமார் 5 மணி நேரம் விசாரணைக்கு பிறகு, விசாகனை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட பணம் எங்கு சென்றது? அது முதலீடாக மாற்றப்பட்டதா? எனும் கேள்விகளுக்கான பதில்களை தேடி அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.