விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகத்தினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்.
விழுப்புரம் ரயில்வே நிலையத்தின் எதிரே, விழுப்புரம்–பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றி கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபானக் கடை காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பலமுறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் குஷிமோகன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட கட்சியினர் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கடையை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் அந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
உடன் மாவட்ட இணை செயலாளர் உடன் இருந்தனர்
