திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், எளிமையின் இலக்கணம் எனப் போற்றப்படும் ஐயா ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, அனைத்துக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் உணர்ச்சிப்பூர்வமான புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடி நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய அமைதி ஊர்வலமானது காந்தி ரோடு, பந்தலடி, பெரிய கடைத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மட்டுமன்றி, பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் மௌனம் காத்துத் தங்கள் அஞ்சலியைப் பதிவு செய்தனர். ஊர்வலத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடையில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணு அவர்களின் திருவுருவப் படத்திற்கு அரசியல் பிரமுகர்கள் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமை தாங்க, நகரச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார். தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தமிழக அரசியலில் தூய்மைக்கும் நேர்மைக்கும் நல்லகண்ணு அவர்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததை நினைவு கூர்ந்தார். அவரைத் தொடர்ந்து மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலு, மன்னார்குடி நகர் மன்றத் தலைவர் த.சோழராஜன், நகர திமுக செயலாளர் வீரா.கணேசன், பாஜக நிர்வாகி பால.பாஸ்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், அமமுக மாநில நிர்வாகி மலர்வேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஜெகதீசன், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மருத்துவர் பாரதிச்செல்வன், விசிக மாவட்டச் செயலாளர் ரமணி, தமிழக வெற்றிக் கழக மாவட்டத் தலைவர் ராஜராஜன், வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், அதிமுக நிர்வாகி பி.ஜி.பாரதி எனத் தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒரே மேடையில் திரண்டு அஞ்சலி செலுத்தியது, நல்லகண்ணு அவர்கள் மக்கள் மத்தியில் பெற்றிருந்த பொதுவான மரியாதையை பறைசாற்றுவதாக அமைந்தது. ஒட்டுமொத்த மன்னார்குடி நகரமே ஒரு கணம் உறைந்து போய், இந்த மாபெரும் தலைவனுக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தியது.















