மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சங்க பொறுப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கூறுகையில் தங்களின் பேரமைப்பு சார்பாக வருகின்ற மே 5-ஆம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான சுற்றுப்பயணத் தொடக்கமாகத் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இன்று மயிலாடுதுறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளோம்.
இந்த மாநாட்டில் வணிகர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் ஒரு தொலைநோக்கு பட்ஜெட்டாக உள்ளது, அதைப் பாராட்டுகிறோம். அதே வேளையில், வணிகர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு இருக்கும். ஆன்லைன் வர்த்தகம் மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டி-மார்ட் போன்ற நிறுவனங்களால் சாதாரணச் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். “நாங்கள் வாக்காளர்களா? அல்லது டி-மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வாக்காளர்களா?” என்ற கேள்வியை அரசிடம் முன்வைக்கிறோம். சிறு வணிகர்களைப் பாதுகாக்கத் மத்திய, மாநில அரசுகள் தனிச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும். கும்பகோணம் மகாமகம் உலகப் புகழ்பெற்றது. 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகாமகத்திற்கு இப்போதே அரசு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பக்தர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.
