இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் முதல் பாதியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா 5 சதங்கள் அடித்தும் தோல்வியை தழுவிய வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதல்இன்னிங்ஸ் நிலவரம் : இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலாக இங்கிலாந்து 465 ரன்கள் எடுத்தது. இந்த நிலவரத்தில் இந்தியா 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாம் இன்னிங்ஸ் மற்றும் தோல்வி: அதன்பின்னர், இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து வெற்றிக்காக 371 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. சிறப்பாக பதிலளித்த இங்கிலாந்து, வெறும் 5 விக்கெட்டுகளை இழந்ததுடன் 373 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 149 ரன்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியுடன், ஒரு டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது. கடந்த 148 ஆண்டுகளாக நடைபெற்று வரும் டெஸ்ட் வரலாற்றில், இது போன்ற ஒரு நிலைமை எதிலும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 12 டெஸ்ட் போட்டிகளில் இது இந்தியாவின் 7வது தோல்வியாக இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கவாஸ்கரின் விமர்சனம்: இந்த தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது :
“இந்தியா ஐந்து சதங்கள் அடித்தாலும், இங்கிலாந்து ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தது. அதுதான் அவர்களை பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் உற்சாகமாக வைத்தது. பீல்டிங் தரம் சாதாரணமாகவே இருந்தது. பும்ரா சிறப்பாக பந்துவீசியிருந்தாலும், அவருக்கு துணை செய்யும் மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. சிறந்த பிட்ச் என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு இது ஏற்றதாக இருந்தது.”
தோல்விகளிலும் பாடம் கற்றுக்கொள் – இந்தியா எதிர்வரும் போட்டிகளில் மீண்டு வருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு !