விருதுநகர் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கான முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் விருதுநகர் தாமரை நகரில் அமைந்துள்ள மாவட்டத் தலைமை அலுவலகத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. வரவிருக்கும் அரசியல் களப்பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஊக்கமளித்தார். அப்போது பேசிய அவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை உலகத் தரத்திற்கு உயர்த்தியுள்ளதோடு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை விரிவாக எடுத்துரைத்தார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள ஒவ்வொரு பொதுமக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சாமானிய மக்கள் எளிதாகப் பயன்பெற நிர்வாகிகள் பாலமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கி, மாவட்டத்தின் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு மண்டல் தலைவர்கள், அனைத்து சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மற்றும் தேர்தல் பணிகளில் முக்கியப் பங்காற்றும் பிஎல்ஏ- 2 (BLA / PLA-2) நிர்வாகிகள் எனப் பெருந்திரளானோர் பங்கேற்றனர். பூத் அளவில் கட்சியைப் பலப்படுத்துவது மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்கப் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகக் கொண்டு செல்வது உள்ளிட்ட களப்பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத் தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளின் உற்சாகம், விருதுநகர் தொகுதியில் பாஜகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு அடித்தளமாக அமைந்தது.














