சென்னை :
வேளச்சேரியில் உள்ள ‘அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்’ உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், உணவகத்திற்கும் ஜொமாட்டோ டெலிவரி நிறுவனத்திற்கும் ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர், ஜொமாட்டோ செயலியின் மூலம் இவ்வுணவகத்தில் இருந்து அசைவு உணவை ஆர்டர் செய்தார். அந்த உணவை உணிந்த பின்னர் அவருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன. இதையடுத்து, அவர் இரண்டு நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சிகிச்சையிலிருந்து மீண்ட ஜெகபிரபு, உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்த, உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, “தனக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புக்காக ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி, ஜெகபிரபு சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், “சேவை குறைபாடுகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும், உணவகம் மற்றும் ஜொமாட்டோ நிறுவனம் இணைந்து, ஜெகபிரபுவுக்கு இழப்பீடாக ரூ.25,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.5,000 என மொத்தம் ரூ.30,000 வழங்க உத்தரவிட்டுள்ளது.